வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு
மழை நீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு ரூ.1.00 கோடி மதிப்பில் வடிகால் வசதிகள் ஏற்படுத்திட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும்
HIGHLIGHTS
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து திருநெல்வேலி டவுண் நயினார்குளம் பகுதி, பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகர் பகுதி, பெருமாள்புரம் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப், முன்னாள் சட்டப்பேரவைத்தலைவர் இரா.ஆவுடையப்பன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணு சந்திரன் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கு பின் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே கணக்கிட்டு பணிகள் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளார். அதன்படி திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் போர்கால அடிப்படையில் திருநெல்வேலி டவுண் நயினார்குளம் சுற்று பகுதி சாலைகள் மிகவும் சேதமடைந்ததை உடனடியாக சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மழை காலங்களில் மழை நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், போக்குவரத்திற்கு இடையூறின்றி சேதம் ஏற்படும் சாலைகளை உடனடியாக சரி செய்யவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதை போல கடந்த காலங்களில் பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை பகுதியில் அமைந்துள்ள பிராந்தன்குளம் உபரி நீர் மற்றும் மனக்காவலம்பிள்ளை நகர் பகுதியை சுற்றி உள்ள மழை நீர் வடிகால் ஓடை வழியாக வெட்டுவான் குளம் சென்றடைந்து, அங்கிருந்து உபரி நீர் பாளையங்கால்வாய் வழியாக செல்கிறது. மேற்படி வடிகால் தூர்வாரப்படாமல் இருந்ததினால் கடந்த மழை காலங்களில் மனக்காவலம்பிள்ளை நகர் முழுவதும் மழை நீர் தேங்கியிருந்தது. மாவட்ட நிருவாகம், மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் கடந்த 30 தினங்களில் மழை நீர் ஓடை முழவதுமாக தூர்வாரப்பட்டுள்ளது. இதனால் சமீபத்தில் பெய்த கன மழையில் மனக்காவலம்பிள்ளை நகரில் மழை நீர் தேங்காத வண்ணம் முற்றிலுமாக சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் மழை நீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு ரூ.1.00 கோடி மதிப்பில் வடிகால் வசதிகள் ஏற்படுத்திட திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை காலங்களில் பொது மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சேதமடைந்த சாலைகள் போர்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் .தொடர்ந்து நெல்லை பெருமாள்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையம், சீர்மிகு நகரத் திட்டம் மூலம் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாநகர காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன், மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ் குமார், திருநெல்வேலி கோட்டாட்சியர் சந்திரசேகர், மாநகராட்சி மண்டல ஆணையாளர் ஐயப்பன், வட்டாட்சியர்கள் சண்முக சுப்பிரமணியன் (திருநெல்வேலி) மற்றும் ஆவுடையப்பன் (பாளையங்கோட்டை) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.