நெல்லையில் வாக்கு சாவடிகளுக்கு ஓட்டுச்சீட்டு பெட்டிகள் அனுப்பும் பணிகள் தீவிரம்
நெல்லை ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து வாக்குச்சீட்டு பெட்டிகள் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.
HIGHLIGHTS
நெல்லையில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 1113 பதவியிடங்களுக்கு நாளை முதல் கட்ட தேர்தல். வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து வாக்குச்சீட்டு பெட்டிகள் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தலில் 3,48,042 பேர் வாக்களிக்க உள்ளனர் .
தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு நாளை முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நாளை முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தை பொருத்தவரை மொத்தம் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 2069 பதவிகளுக்கு இந்த தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றது. நாளை நடைபெறும் முதல் கட்ட தேர்தலை பொறுத்த வரை மொத்தம் 1113 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது. இதில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 32 பேர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, 319 பேர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு, 534 பேர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 2121 பேர் என மொத்தம் 3006 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
முதல்கட்ட தேர்தலையொட்டி ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 621 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் 182 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்பதால் அங்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 64 வாக்குச்சாவடிகளை வெப்கேமரா கொண்டு அலுவலர்கள் கண்காணிக்க உள்ளனர். முதல் கட்ட தேர்தலில் 5035 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். வாக்காளர்களை பொருத்தவரை ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 765 பேர், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 78,234 பேர், மூன்றாம் பாலினத்தவர் 43 பேர் என மொத்தம் 3 லட்சத்து 48 ஆயிரத்து 42 வாக்காளர்கள் நாளை நடைபெறும். முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவில் முறைகேடுகள் மற்றும் பதற்றத்தை தணிக்க மாவட்டம் முழுவதும் 10 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதையொட்டி ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து வாக்குப் பதிவு மையங்களுக்கு வாக்குச்சீட்டு பெட்டிகள் அனுப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அதாவது உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை ஒரே நபர் நான்கு பதவிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்றால் பழைய முறைப்படி வாக்கு சீட்டு முறை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வெள்ளைநிற வாக்குச்சீட்டும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு பச்சைநிற வாக்குச்சீட்டும் , கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச்சீட்டு என நான்கு வண்ணங்களில் வாக்குச் சீட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த வாக்குச்சீட்டுகள் உள்பட 72 பொருட்கள் அடங்கிய வாக்குச்சீட்டு பெட்டிகள் ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு பதிவு மையங்களுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்கு பதிவு மையங்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் வாக்கு பெட்டி அனுப்பும் பணிகள் நடைபெற்றது. இந்த வாக்குப் பெட்டிகளை சம்பந்தப்பட்ட மையங்களில் உள்ள தேர்தல் அலுவலர்கள் பெற்றுக் கொள்வார்கள்.