மாணவியை பாதிவழியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து! நடத்துநர் இடைநீக்கம்!
திருநெல்வேலியில் இசைக்கருவிகளை ஏற்றியதால் மாணவியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
HIGHLIGHTS
திருநெல்வேலியில் இசைக்கருவிகளை ஏற்றியதால் மாணவியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி அருகே சீதபற்பநல்லூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் பயின்று வருகிறார்கள். அந்த கல்லூரியில் கலைவிழா நடந்துள்ளது. விழாவில் கலந்துகொண்டு தனது தனித்திறமையைக் காட்டிய மாணவி ரஞ்சிதாதான் பாதிக்கப்பட்டவர். நடுவழியில் இறக்கிவிடப்பட்ட அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. டிரம்ஸ் மற்றும் பறை இசைக்கருவிகளை வண்டியில் ஏற்ற முடியாது என இறக்கிவிட்டுள்ளனர்.
ரஞ்சிதா சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் அந்த கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கலைவிழா முடிந்து தனது ஊருக்கு சென்ற ரஞ்சிதா, திருநெல்வேலியிலிருந்து மதுரை செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். அந்த பேருந்தில் மதுரைக்கு போக டிக்கெட் எடுத்தவரை நடத்துநர் இசைக்கருவிகள் குறித்தும் அவற்றை பேருந்தில் ஏற்றியது குறித்தும் அவதூறாக பேசியுள்ளார். மேலும் டிக்கெட் தரமுடியாது என்று கூறி ஒருமையில் திட்டி அந்த மாணவியை பாதி வழியில் இறக்கி விட்டுள்ளார். வண்ணாரப்பேட்டை வடக்கு புறவழிச் சாலையில் அவரை இறக்கிவிட்ட நிலையில் அவர் வேறொரு பேருந்தில் ஏறிச் சென்றுள்ளார். இதனால் பேருந்து நடத்துனரை சக பயணிகள் கடிந்துகொண்டுள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துநர் மீது தவறு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை திசையன்விளை கிளைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். மேலும் அவரை பணி இடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளனர்.