தீபாவளி: நெல்லை பூச்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லையில், மல்லிகை பூ கிலோ 1500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ கிலோ 1300 க்கும் விற்பனையாகிறது.
HIGHLIGHTS
தீபாவளி பண்டிகை, நாளைய தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இறுதிநேர விற்பனை, நெல்லை மாவட்டத்தில் களை கட்டியுள்ளது. பண்டிகைக்கு தேவையான புத்தாடைகள் பலசரக்கு பொருட்கள் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கான பூக்களின் விற்பனையும், நெல்லை மாவட்டத்தில் சூடுபிடித்து வருகிறது. நெல்லை பூ சந்தைகளில் பூக்களை வாங்க பொதுமக்கள் காலை முதலே குவிந்தனர். கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்து விலை ஏற்றம் அடைந்துள்ளது. மல்லிகை பூ ஒரு கிலோ 1,500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ ஒரு கிலோ ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல, பன்னீர் ரோஸ், வேடர் ரோஸ் வகைகள் 180 ரூபாய்க்கும், தாமரை பூ ஒரு எண்ணம் 50 ரூபாய்க்கும், விற்பனையாகிறது. பூஜைக்கு பயன்படுத்தும் அரளி பூ, ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், நந்தியாவட்டை பூ ஒரு கிலோ 180 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பூக்களின் விலை ஏற்றம் அடைந்திருந்தாலும் பொதுமக்கள் பண்டிகையின் தேவையை கருத்தில் கொண்டு பூக்களை வாங்கி செல்கின்றனர்.