நெல்லையில் வெறிச்சோடிய சாலைகள்: பாதுகாப்பு பணியில் 860 போலீசார்
நெல்லை மாவட்டம் முழுவதும் 14 சோதனைச் சாவடிகள் அமைத்து 860 போலீசார் முழு ஊரடங்கு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
HIGHLIGHTS
தமிழ்நாட்டில் கொரனோ மூன்றாம் அலை மற்றும் புதிய வகை கொரனோவான ஓமிக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. முழு ஊரடங்கில் மருத்துவமனைகள் மருந்தகங்கள், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது.
எனவே அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர இதர காரணங்களுக்காக வெளியே சுற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை கண்காணிக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி மாநகர காவல்துறை சார்பில் மாநகர் முழுவதும் 7 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு துணை ஆணையர் (கிழக்கு) சுரேஷ்குமார் தலைமையில் 350 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும் மாநகர காவல் துறை சார்பில் 18 இருசக்கர ரோந்து வாகனங்கள், எட்டு நான்கு சக்கர ரோந்து வாகனங்களும் மாநகர எல்லை முழுவதும் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் 7 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் 510 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 64 இருசக்கர ரோந்து வாகனங்களும், 21 நான்கு சக்கர ரோந்து வாகனங்களிலும் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் மாவட்டம் முழுவதும் 860 காவலர்கள் இன்று முழு ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக மாநகரில் வண்ணாரப்பேட்டை கேடிசி நகர் நெல்லை சந்திப்பு ஆகிய இடங்களில் காவல்துறையினர் பேரிகார்டர் அமைத்து தேவையில்லாமல் சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளை கண்காணித்து வருகின்றனர். உரிய காரணங்கள் இல்லாமல் வரும் வாகனங்களை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து வருகின்றனர்.
அதேபோல் மருத்துவமனை பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள் உரிய அடையாள அட்டையை காண்பித்த பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கிடையில் முழு ஊரடங்கையொட்டி இன்று பேருந்துகள் இயங்காததால் நெல்லை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் பணிக்கு செல்வதில் கடும் சிரமப்பட்டனர். பலர் அதிக பணம் செலவு செய்து ஆட்டோக்களிலும், பிற வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டும் பணிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோல் முழு ஊரடங்கால் சென்னை மற்றும் கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.