நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 3 பேருந்து நிலையங்கள்: முதல்வர் நாளை திறப்பு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பேருந்து நிலையங்களை காணொலி மூலம் முதல்வர் நாளை திறப்பு.
HIGHLIGHTS
நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் உட்பட 110 கோடி ரூபாய் மதிப்பில் முடிவடைந்த பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.
நெல்லை மாநகரை அழகு படுத்தும் விதமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதில் புதிய பேருந்து நிலைய விரிவாக்கம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், சந்திப்பு ரெயில் நிலையம் அருகே மூன்று அடுக்குகளைக் கொண்ட இரண்டு சக்கர வாகன நிறுத்தம், புதிய பேருந்து நிலையத்தில் அறிவியல் பூங்கா, உள்பட 110.19 கோடி ரூபாய் மதிப்பில் முடிவடைந்த 12 பணிகளை நாளை சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.
புதிய பேருந்து நிலையத்தில் மாணவ- மாணவிகளை கவரும் வகையிலும், அறிவில் திறனை வளர்த்துக் கொள்ளும் அளவில் அறிவியல் தொடர்பான கருவிகள், படங்கள், ராக்கெட் வடிவமைப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் அறிவியல் பூங்கா அமைந்துள்ளது. இதுபோன்று நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில் பேருந்து நிலைய விரிவாக்கப்பகுதிகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். திறப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.