நெல்லை மாநகர புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்பு
திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட அன்பு , சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் அளித்து பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக பணியாற்றி வந்த தீபக் டாமோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி இட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் புதிய நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளராக அன்பு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசும் போது திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் அளித்து பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை மக்களின் நெருங்கிய நண்பனாக மக்களின் பாதுகாப்புக்காக சிறந்து விளங்கும் என்றும் தெரிவித்தார். கடந்த 2015, 16ம் ஆண்டுகளில் நெல்லை சரக டிஐஜியாகவும், மாநகர காவல்துறை ஆணையாளராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.