தூத்துக்குடியில் ஓய்வூதியம் பெற்று தருவதாக கூறி நகை திருடிய பெண் கைது
தூத்துக்குடியில் ஓய்வூதியம் பெற்றுத்தருவதாக கூறி நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்
HIGHLIGHTS
தூத்துக்குடி அசோக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி சுப்புலட்சுமி (60) கடந்த 01.09.2021 அன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் தான் தொழிலாளர் நல வாரியத்திலிருந்து வருவதாகவும், முதியோர் ஓய்வூதியம் பெற்று தருவதாக கூறி தன்னை அறிமுகம் செய்து கொண்டு, சுப்புலட்சுமியின் வீட்டிற்குள் நுழைந்து அவரிடம் பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது சுப்புலட்சுமி மயங்கி விழுந்துள்ளார்.
மயக்கம் தெளிந்து பார்த்த போது தான் அணிந்திருந்த கம்மல், செயின் மற்றும் மோதிரம் என 10 பவுன் தங்க நகைகளை அந்த மர்ம பெண் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுப்புலட்சுமி அளித்த புகாரின்பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன், முதல் நிலை பெண் காவலர் சுந்தரி, காவலர் சுகன்யா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்டவரை கண்டுபிடித்து விரைந்து கைது செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
அதன் பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி பாப்பாத்தி என்கிற லதா (56) என்பவர் சுப்புலட்சுமியிடம் நூதன முறையில் நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் நேற்று பாப்பாத்தியை கைது செய்தனர்.