உணவுப் பொருட்கள் உற்பத்தி தொழில் தொடங்கப் போகிறீர்களா? மானியத்துடன் ரூ. 1 கோடி கடனுதவி…
தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழில் தொடங்க மானியத்துடன் ரூ. 1 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
HIGHLIGHTS
மத்திய, மாநில அரசுகள் சார்பில், தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு பல்வேறு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பாரதப் பிரதமரின் பல்வேறு திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டம் மூலம் இளைஞர்கள் தொழில் தொடங்க உதவி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழில் தொடங்க விரும்புவோருக்கு மானியத்துடன் ஒரு கோடி ரூபாய் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
பாரதப் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்த மானியத்துடன் கூடிய கடன் திட்டம் (பிஎம்எப்எம்ஈ) மூலமாக உணவுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை கடனுதவி வழங்கும் திட்டம் தற்போது மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரையிலும் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக்கள் தொழில் தொடங்கினால் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தொடக்கநிலை மூலதனமாக ரூ .40,000 வழங்கப்படும்.
தொழில் தொடங்கும் முதலீட்டாளர்கள் தங்களது மூலதனமாக 10 சதவீதம் பங்களிப்பு செய்ய வேண்டும். மீதம் 90 சதவீதம் வங்கிகளில் பிணையமில்லாக் கடனாகப் பெறலாம். இந்தத் திட்டமானது மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற கல்வித் தகுதி, வயது வரம்பு ஏதுமில்லை.
இந்தத் திட்டத்தின்படி, கடலை மிட்டாய், பழச்சாறு, ஊறுகாய் வகைகள், மாவு வகைகள், மரச்செக்கு எண்ணெய், திண்பண்டங்கள், மசாலா பொருட்கள், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் மீன் பதப்படுத்துதல் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரித்து பதப்படுத்தும் தொழில்களைத் தொடங்கலாம்.
ஏற்கெனவே இயங்கி வரும் குறு நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும் உதவி பெறலாம். மேலும் தொழில் தொடங்க தேவையான உரிமங்கள் மற்றும் சந்தைப்படுத்துதலை மேம்படுத்த தேவையான உதவிகளும் வழங்கப்படுகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண், பண்ணை மற்றும் கடல்சார் உணவுப் பொருட்கள் சார்ந்த தொழில்களைத் தொடங்க விருப்பம் உள்ளவர்கள், சுய உதவிக் குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் pmfme.mofpi.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம்
மேலும், பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பைபாஸ் ரோடு, தூத்துக்குடி என்ற முகவரியில் நேரிலும் அணுகி பயன் பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.