ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திடக்கழிவு தரம் பிரிக்கும் மையம் : ஆணையாளர் ஆய்வு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திடக்கழிவு தரம் பிரிக்கும் மையம்-தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆய்வு மேற்க்கொண்டார்.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கதிர்வேல் நகரில் ரூ. 2 கோடி செலவில் திடக்கழிவு தரம் பிரிக்கும் மையம் அமைய இருக்கும் இடத்தை ஆணையாளர் சாருஸ்ரீ நேரில் ஆய்வு மேற்க்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம், சாலை, தெரு விளக்கு மற்றும் கழிவுநீர் கால்வாய், வாகன காப்பகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி கதிர்வேல் நகரில் ரூபாய் 2 கோடி செலவில் திடக்கழிவு தரம் பிரிக்கும் மையம் அமைய இருக்கும் இடத்தினை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில், தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து பிரித்து வாங்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து திடக்கழிவு தரம் பிரிக்கும் மையத்தில் மக்காத குப்பைகளான தெர்மாகோல், துணிகள் பிளாஸ்டிக் அட்டை மற்றும் கண்ணாடி பொருட்கள் உள்ளிட்டவற்றை தரம் பிரித்து அவற்றை வாங்குகின்ற நுகர்வோர்களிடம் விற்கப்படுகிறது. அதற்காக தூத்துக்குடி கதிர்வேல் நகரில் ரூ. 2 கோடி செலவில் சுமார் சிட்டி திட்டத்தின் கீழ் திடக்கழிவு தரம் பிரிக்கும் மையம் அமைக்கும் பணிகள் விரைவில் துவக்க உள்ள நிலையில் இன்று அதற்கான இடத்தை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளர் சேர்மக்கனி, நகர் நல மருத்துவர் வித்யா, மண்டல அலுவலர் சேகர், உதவி பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கதிர்வேல் நகரில் நுண் உரம் செயலாக்கும் மையத்தை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.