ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற நடவடிக்கை- ஜாக்டோ, ஜியோ
பள்ளி ஆசிரியர்களும் வீட்டிலிருந்தே பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும் என ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மாநில தலைவர் கூறினார்.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மாநில தலைவர் தியாகராஜன் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது கட்ட பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. முதல்கட்ட பாதிப்பை விட இரண்டாம் கட்ட பாதிப்பு அதி தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் பலர் கொரோனாவுக்கு உயிரிழந்திருக்கிறார்கள்.
கொரோனா இரண்டாவது அலையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்ற துறைகளில் பள்ளிக் கல்வித்துறையும் ஒன்று என்பதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது இல்லங்களில் இருந்தவாறே மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்கு அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும்.
ஒரு புறம் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என குரல் கொடுத்து விட்டு மறுபுறம் நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு பயிற்சி தர சொல்லி ஆசிரியர்களை வரவழைக்க செய்யும் நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன. ஆகவே இந்த இரட்டை நடவடிக்கைகளை விட்டுவிட்டு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகளில் இந்த அரசாங்கம் முழுமையாக இறங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றார்.