இந்திய மருத்துவ சங்கம் ரோச் பூங்காவில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ரோச் பூங்காவில் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
HIGHLIGHTS
இந்திய மருத்துவ கழகம் சார்பில் ரோச் பூங்காவில் கொரோனா 3-வது அலை குறித்து நடைபயிற்சி மேற்கொள்பவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கொரோனா 3-வது அலை எச்சரிக்கையையொட்டி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ரோச் பூங்கா அருகே இந்திய மருத்துவ கழகம் மற்றும் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் இன்று காலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நேரு தலைமை தாங்கி பொது மக்களுக்கு இலவச முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழக அரசு கொரோனா 3-வது எச்சரிக்கையையொட்டி வரும் வாரத்தை கொரோனா விழிப்புணர்வு வாரமாக கடை பிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ கழகம் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள் வழங்கி கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் சீரிய நடவடிக்கையினால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பினால் 20க்கும் குறைவானவர்களே சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல அதிகரித்து வந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்றும் குறைந்து தற்போது 15-ற்கும் குறைவான நபர்கள் கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பரிசோதனைகளை அதிகளவு நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து நிலைகளிலும் நிலைகளிலும் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தூத்துக்குடி மாவட்டம் தயாராக உள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில், இந்திய மருத்துவ கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் மருத்துவர்.சந்திரசேகரன், செயலாளர் மருத்துவர்.மாரிமுத்து, நிதிசெயலளர் மருத்துவர். சிவசைலம், துணைச்செயலாளர் மருத்துவர் ஆர்த்தி கண்ணன், மருத்துவர். குமரன், உறைவிட மருத்துவர் சைலேஸ் ஜெயமணி உள்ளிட்ட மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.