திருவாரூர் மாவட்ட உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் பாதுகாப்பினை முறையாக பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் திருவாரூர் ஓட்டல் உரிமையாளர் சங்கம் இணைந்து திருவாரூரில் பண்டிகைக்கால உணவு தயாரிப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சவுமியா தலைமையில் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஓட்டல்கள், பேக்கரிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சௌமியா தெரிவித்ததாவது:-
விதிகளை மீறும் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளுக்கு அபராதம் கடுமையாக்கப்படும். இரண்டு முறை அபராதம் விதித்தும் மீண்டும் பாதுகாப்பு விதிகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்படும். அனைத்து கடைகளிலும் ஒருமுறை உபயோகப்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்த மாட்டோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அனைவருக்கும் தெரியும் வகையில் நோட்டீஸ் வைக்க வேண்டும். வருங்காலத்தில் முழு பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களால் மூலம் மட்டுமே கடைகள் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.