திருவாரூர் அருகே ஏடிஎம்-ஐ கேஸ் கட்டர் கொண்டு கொள்ளை முயற்சி : ஒருவர் கைது,3 பேர் தப்பி ஓட்டம்
திருவாரூர் அருகே ஏடிஎம்-ஐ கேஸ் கட்டர் கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ,3 பேர் தப்பி ஓட்டம், ஒருவர் கைது செய்யப்பட்டார்.தடுக்க முயன்றவர் கொலை செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
திருவாரூர் அருகே கூடூர் கிராமத்தில் ராஜராஜன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் எஸ்பிஐ ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று நள்ளிரவு எஸ்பிஐ ஏடிஎம்-ஐ மர்ம நபர்கள் உடைக்கும் சத்தம் கேட்டு அருகே இருந்த வீடுகளில் உள்ளவர்கள் தடுக்க முயன்றுள்ளனர்.
மேலும் இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் உடனடியாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுவந்த போலீசார் விரைந்து வந்து லெட்சுமாங்குடி பகுதியை சேர்ந்த மதன் என்பவரை பிடித்தனர். இதில் மற்ற மூவர் ஒரு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கொள்ளையர்கள் சிறிது தூரம் சென்ற பின்னர் மதன் என்பவரை மீட்டு அழைத்துச் செல்வதற்காக திரும்பி அதிவேகத்தில் வந்துள்ளனர். அப்போது சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ராஜராஜனின் மாமனார் தமிழரசன் (60) கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டபோது கொள்ளையர்கள் வைத்திருந்த கத்தியால் நெஞ்சில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கடந்த புதன்கிழமை ஏடிஎம் மையத்தில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ள ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் கடையிலிருந்து கேஸ் கட்டர் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வெல்டிங் பட்டறை கொள்ளை குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், ஏ.டி.எம் கொள்ளை முயற்சியில் படுகொலை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.