மாநகராட்சியாக தரம் உயர்த்த தேனியில் சர்வே பணிகள் தொடக்கம்
தேனி நகராட்சியின் எல்லைகளை விரிவாக்கம் செய்து, மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அடிப்படை சர்வே பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
HIGHLIGHTS
தேனி நகராட்சியின் எல்லைகளை விரிவுபடுத்தி மாநகராட்சியாக தரம் உயர்த்த தேவையான அடிப்படை பணிகளை நகரமைப்பு நிர்வாகம் செய்து வருகிறது. தற்போதய உள்ளாட்சி தேர்தலில் இது சாத்தியமில்லை என்றாலும், தற்போது தேனி நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அவர்களின் பதவி காலத்திற்குள்ளேயே மேயராக அறிவிக்கப்பட்டு பவனி வரும் வாய்ப்பு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி நகராட்சியை ஒட்டி, பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி, பூதிப்புரம் பேரூராட்சிகள், அன்னஞ்சி, வடபுதுப்பட்டி கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளையும், கிராம ஊராட்சிகளையும் இணைத்து, தேனியை மாநகராட்சியாக்க வேண்டும் என்ற கோரிக்கை 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.
அ.தி.மு.க., ஆட்சியில் இந்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டு இருந்தது. தி.மு.க., தற்போது ஆட்சிப்பொறுப்பேற்றதும் மாநிலம் முழுவதும் உள்ளாட்சிகளை தரம் உயர்த்துவது குறித்த பல்வேறு கட்ட ஆய்வுப்பணிகளை நடத்தி வருகிறது.
இந்த பட்டியலில் தேனி மாநகராட்சியும் இடம் பெற்றுள்ளது. திண்டுக்கல் நகராட்சி எப்படி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு மாநகராட்சியாக மாற்றப்பட்டதோ, அதே பாணியில் தேனியை மாநகராட்சியாக மாற்ற பணிகளை தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த கோரிக்கையினை விட எல்லை விரிவாக்கம் பல மடங்கு அதிகமாக உள்ளது. தேனியில் இருந்து திண்டுக்கல் வழித்தடத்தில் 16 கி.மீ., தொலைவில் உள்ள பெரியகுளம் நகராட்சி, வடகரை ஊராட்சி வரை எல்லை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அப்படி சேர்த்தால் மாவட்ட நீதிமன்றமும், இதர நீதி மன்றங்களும் தேனி மாநகராட்சி எல்லைக்குள் வந்து விடும்.
அதேபோல், மதுரை வழித்தடத்தில் க.விலக்கு வரை தேனி மாநகராட்சி எல்லைக்குள் சேர்க்கப்பட உள்ளது. அப்படி சேர்த்தால் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை தேனி மாநகராட்சி எல்லைக்குள் வந்து விடும்.
கம்பம் வழித்தடத்தில் வீரபாண்டி பேரூராட்சி வரை எல்லை நீள்கிறது. போடி வழித்தடத்தில் பூதிப்புரம் பேரூராட்சி கோடாங்கிபட்டி ஊராட்சி தேனி மாநகராட்சி எல்லைக்குள் வருகிறது. இப்படி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டால் தேனிக்கு பெருமாநகராட்சி அந்தஸ்த்து கூட வழங்கலாம். இதற்காக சர்வே பணிகள் நகரமைப்பு நிர்வாகம் மூலம் நடைபெற்று வருகின்றன. இதற்கான அறிவிப்பினை முதல்வர் சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்படி முதல்வர் அறிவித்தாலும் இதற்கான அடிப்படை பணிகள் நிறைவடைந்து தேனி மாநகராட்சி அதிகாரப்பூர்வமாக செயல்பட இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகும். எப்படி இருந்தாலும் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேனி நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்படுபவருக்கு நகரின் முதல் மேயராக வலம் வரும் வாய்ப்பு கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.