அதிராம்பட்டினம் நகராட்சியில் இரண்டு மணி நேரமாக வாக்கு பதிவு நிறுத்தம்
அதிராம்பட்டினம் நகராட்சியில் இரண்டு மணி நேரமாக வாக்கு பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சி தேர்தல் இன்று நடைபெறுவதையொட்டி காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறத் துவங்கியது.
இந்நிலையில் இருபத்தி ஏழு வார்டுகள் கொண்ட அதிராம்பட்டினம் நகராட்சியில் கடற்கரை தெரு பகுதியில் உள்ள 23வது வார்டுக்குட்பட்ட வாக்கு பதிவு மையத்தில் உள்ள வாக்கு இயந்திரம் சிறிதுநேரம் வாக்கு பதிவுக்கு பிறகு பழுதானது. பின்னர் அதைத்தொடர்ந்து பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து சற்று நேரத்திலேயே மீண்டும் இயந்திரம் பழுதானது. இதேபோல மூன்று முறை இயந்திரம் பழுதாகி வாக்காளர்கள் ஓட்டு போட முடியாமல் போனது.
இதனால் வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்து நின்று விட்டு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது . இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் புதிய வாக்கு இயந்திரம் வரவழைக்கப்பட்டவுடன் மீண்டும் வாக்குப்பதிவு துவங்கும் என அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.