நெல்கொள்முதல்நிலையத்தில் விற்பனைக்காக முளைத்தநெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகள்
ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் ஈரமான நெல் தேங்கும் நிலையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்
HIGHLIGHTS
20 நாட்களாக வெயில், மழை, பனி என நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகள். இரண்டு நாட்களில் பெய்த மழையில் முளைத்து போனு நெல்மணிகள். ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என கூறும் அதிகாரிகளால் டெல்டா விவசாயிகள் குழப்பத்தில் காத்திருக்கின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா, தாளடி சுமார் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது மாவட்டம் முழுவதும் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நெல் கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 30 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது வரை திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் பொன்னாப்பூர், மேல உளூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கடந்த 20 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் நிலையங்களில் இரவு - பகலாக காத்திருக்க வேண்டிய சூழலில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.மேலும் மாவட்டம் முழுவதும் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நெல் மணிகள் அனைத்தும் முளைத்து விட்டதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
குறிப்பாக கடந்த 2 நாட்களாக பெய்த மழைக்கே நெல்மணிகள் முளைத்து விட்டதாகவும், கடந்த 10 நாட்களாக பனியில் நெல்மணிகள் கிடப்பதால், நெல்லை காய வைப்பது, காவல் காப்பது என ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே நெல்லை கொள்முதல் செய்வதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றார்.
ஆனால் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று கேட்டால், தங்களுக்கு அரசு உத்தரவு எதுவும் வரவில்லை என கூறுகின்றனர். இதனால் நாங்கள் என்ன செய்வது என்றே தெரியாத குழப்பத்தில் இருப்பதாகவும். எனவே ஆன்லைன் முறையை ரத்து செய்து, பழைய முறைப்படியே கொள்முதல் செய்ய வேண்டும். ஆன்லைன் முறையில் பதிவு செய்தால், ஈரமான நெல் தங்கிவிடும், இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் உமாமகேஸ்வரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, இதுவரை மாவட்டத்தில் 30 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை உயர்த்தப்படும் எனவும், விவசாயிகள் ஆன்லைன் முறையில் எந்த குழப்பமும் இன்றி பதிவு செய்வதற்கு, கொள்முதல் நிலையங்களில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.