மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்காலம்
பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற நவ.30 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
HIGHLIGHTS
தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.
1 முதல் 5 வகுப்பு வரை பயிலுவோருக்கு ரூ.1000-, 6ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ.3000-, ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ. 4000- இளங்கலை கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ. 6000- மற்றும் முதுகலை கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ.7000- வழங்கப்படுகிறது. பார்வையற்றவர்கள் 9 முதல் 12 வகுப்பு வரை பயின்று வந்தால் கூடுதலாக ரூ.3000- வாசிப்பாளர் உதவித் தொகை மற்றும் பட்டப்படிப்பு படித்து வந்தால் ரூ. 5000- கூடுதலாக வாசிப்பாளர் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-23ம் கல்வி ஆண்டிற்கு மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் பார்வைற்றோர்க்கான வாசிப்பாளர் உதவித் தொகை வழங்க விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாற்றுத் திறனாளிகள் சென்ற ஆண்டு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 9 வகுப்பு மேல் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகள்
சென்ற ஆண்டு இறுதித் தேர்வில் 40 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வேறு எந்த துறையிலும் கல்வி உதவித் தொகை பெறாதவராக இருக்க வேண்டும். தஞ்சாவூர்; மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற 30.11.2022-தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் பார்வையற்றோர்கள் வாசிப்பாளர் உதவித் தொகை பெற தனியாக ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி உதவித் தொகை விண்ணப்பத்தில் கல்வி பயிலும் நிறுவனத்தில் சான்று பெற்று மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், மதிப்பெண் சான்று, வங்கி கணக்கு பாஸ் புத்தகம் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இந்த உதவித் தொகை வழங்கும் திட்டம் சம்பந்தமான விவரங்களை பெற 04362-236791 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை வரும் 30.11.2022க்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்தார்.