தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் இயந்திரங்கள் அர்ப்பணிப்பு
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசி. உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கூடுதல் எண்ணிக்கையிலான இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசி. உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கூடுதல் எண்ணிக்கையிலான இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
உலக சிறுநீரக தினம் 2006 முதல் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தென்காசி அரசு மருத்துவமனையில் உலக சிறுநீரக தினம் கொண்டாடப்பட்டது.
தென்காசி அரசு மருத்துவமனையில் ஏற்கனவே 2014 டிசம்பர் முதல் 2 இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களுடன் இரத்த சுத்திகரிப்பு பிரிவு திறக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்று வந்தது. பின்னர் நோயாளிகளின் நலனுக்காக 3 இயந்திரங்கள் அதிகரிக்கப்பட்டு 5 இயந்திரங்களுடன் தற்போது வரை செயல்பட்டு வருகிறது .
இங்கு தென்காசி மாவட்டத்திலுள்ள சிறுநீரக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பயன்பெற்று வருகின்றனர். ஆனாலும் அதிக அளவில் நோயாளிகள் இருப்பதால் இங்கு இரத்த சுத்திகரிப்பு செய்ய முடியாமல் திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர் . அவர்களின் அலைச்சலை குறைப்பதற்காகவும் நோயாளிகளின் நலனுக்காகவும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்,இணை இயக்குனர் நலப்பணிகள் மற்றும் கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் அவர்களின் சீரிய முயற்சியினால் கூடுதலாக 3 இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் தென்காசி மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. .
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மூன்று ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் சுமார் 20 இலட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது .
இதனை தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் துரை ரவிச்சந்திரன் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார்,தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் . இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா தலைமை தாங்கினார் , தென்காசி மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் , உறைவிட மருத்துவர் ராஜேஷ் , உதவி உறைவிட மருத்துவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறுநீரக பிரிவு மருத்துவர் கார்த்திகேயன் , செவிலியர் கண்காணிப்பாளர்கள் பிச்சைவடிவு , பத்மாவதி, திருப்பதி ,செவிலியர் சத்யா , இரத்த சுத்திகரிப்பு நுட்புனார்கள் அருள்ராஜ் , மனோ மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் கலந்து கொண்டனர் .
மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்வின் பேசும்போது, தென்காசி மருத்துவமனையில் மொத்தம் 32 பயனாளிகள், மாதத்திற்கு குறைந்தது எட்டு முறை என்று சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது சிறு வயதினரும் சிறுநீரக பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். பொதுமக்கள் ஆரம்ப நிலையிலேயே இந்நோய்க்கு சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும்,தொடர்ந்து உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளை, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் தன்னிச்சையாக வாங்கி உட்கொள்ளக்கூடாது எனவும் அறிவுரை கூறினார்.
தென்காசி மாவட்டம் முழுவதும் 99 சிறுநீரக பாதிப்பு நோயாளிகள் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
தென்காசி மாவட்ட சிறுநீரக நோயாளிகள் இனி வரும் காலங்களில் மருத்துவக் குறிப்புகள் மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையுடன் வந்து, இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். நோயாளிகளின் உடன் இருப்பவர்களுக்கான இருக்கை , குடிநீர் மற்றும் தொலைக்காட்சி வசதிகளுடன் கூடிய ஓய்வு அறையானது ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது . அப்பணிகள் நடைபெற்று முடியும் வரை பொதுமக்கள் பொறுமைக்காத்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து உதவுமாறு மருத்துவமனை கண்காணிப்பாளர் கேட்டு கொண்டார் .
நோயாளிகளின் தேவைகள் அனைத்தினையும் பூர்த்தி செய்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் எப்போதும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துக்கொண்டார் . நிகழ்ச்சியின் முடிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார் .
நிகழ்ச்சியில் தென்காசி நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர், மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ், பொருளாளர் ஈஸ்வரன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.