காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்
தென்காசியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி கோவில் மாசிப் பெருந்திருவிழாவில் சுவாமி - அம்பாள் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசிப் பெருந் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாசிப் பெருந்திருவிழா கடந்த 18-ம் தேதி சுவாமி சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கி திருவிழா நடைபெற்று வந்தது. விழாவில் தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
விழாவின் 9-ம் திருநாளான இன்று சுவாமி, அம்பாள் திருத்தேரோட்டம் நடந்தது. முன்னதாக திருத்தேருக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 2-ம் பராக்கிரம பாண்டியன், விநாயகர், முருகர் சப்பர ரத வீதி உலாவும், இதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து திருத்தேரோட்டம் நடந்தது. இதில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.