இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை: மறுவாழ்வு நலத்துறை இயக்குநர்தகவல்
இலங்கை அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட ஆய்வில், 80 சதவீதம் அகதிகள் மீண்டும் இலங்கைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்
HIGHLIGHTS
மத்திய அரசிடம் இருந்து இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை விரைவில் பெற்றுத்தரப்படும் மறுவாழ்வு நலத்துறை இயக்குநர் உறுதி.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் இன்று ஆய்வு செய்தார். இலங்கை அகதிகள் வசிக்கும் வீட்டுக்கு நேரில் சென்று அவர்களது அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்திய குடியரிமை வழங்க வேண்டும். குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி, வீடு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஜெசிந்தா லாசரஸ் மேலும் கூறியதாவது : தமிழகம் முழுவதும் தங்கியுள்ள இலங்கை அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட ஆய்வில், 80 சதவீதம் அகதிகள் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் முறையாக ஆவணம் பெற்று செல்வது குறித்து இதுவரை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவில்லை. அப்படி மனு அளிக்கும் பட்சத்தில் மத்திய அரசிடம் அனுமதி பெற்று மீண்டும் இலங்கை அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடு நிச்சயம் மாநில அரசு சார்பில் எடுக்கப்படும் என்றார்.
மேலும் சிலர், தாங்கள் தொடர்ந்து தமிழகத்திலேயே வசிக்க ஆசைப்படுவதால், எங்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர். அது குறித்தும், தமிழக முதல்வர் கடிதம் மூலமாக மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசிடம் இருந்து விரைவில் அனுமதி பெற்று இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கொரோன காலத்தில் இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்வது அதிகரித்துள்ளதால் அதனை தடுக்க கடல் பாதுகாப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதுடன், அகதிகள் நல மறுவாழ்வு துறை அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது என்றார்.