300 ஆண்டுகள் பழமையான வேட்டைப் பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேக விழா
புதுக்கோட்டையில் 300 ஆண்டுகள் பழமையான வேட்டைப் பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
புதுக்கோட்டை சமஸ்தான தொண்டைமான் மன்னர்களால் மெய்க்காப்பாளராகவும், நம்பிக்கைக்குரிய படைத்தளபதியாக விளங்கி அதிவீரம் படைத்த வேட்டை பெருமாளுக்கு சமஸ்தானத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் புதுக்கோட்டை மன்னர்களின் வேண்டுகோளுக்கிணங்க புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு சொந்தமான முக்கிய பொருளை எதிரிகள் கொண்டு சென்றதையடுத்து, அதை மீட்டு வந்த போது எதிரிகளால் அம்பு எய்யப்பட்டு, குற்றுயிரும் குலையுயிருமாக வந்து, மன்னர்களிடம் சேர்த்து உயிர் விட்டார்.
இதன் பின்னர் புதுக்கோட்டை சமஸ்தானம் மன்னர் குடும்பத்தினர் வேட்டை பெருமாளை தெய்வமாக வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் 300 ஆண்டுகள் பழமையான இந்த திருக்கோயில் தற்போது மிகப்பெரிய அளவில் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
புதுக்கோட்டை, பழைய பேருந்து நிலையம் அருகே டவுன், நீதிமன்ற பொது வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வேட்டைப் பெருமாள் கோவில் நூதன மஹா கும்பாபிஷேக விழா கடந்த 18ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து ஆறுகால யாக பூஜைகளும், பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்று, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, இன்று காலை மகா கும்பாபிஷேகம் எனும் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்று, பிரசாதம் வழங்கப்பட்டது.பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.