கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 10 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 10 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நோட்டீஸ்
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை சரிவர பின்பற்றாத பத்துக்கும் மேற்பட்ட பள்ளித்தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், அரசின் நிலையானவழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று பள்ளித்தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வின் பொழுது கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வெட்டன் விடுதி மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வடவாளம் அரசு மேல்நிலைப்பள்ளி, வைரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எப்.எஸ் மெட்ரிக் மேல்நிலைபள்ளி, சிதம்பரவிடுதி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது தெரிய வருகிறது.
எனவே அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.