புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு அரும்பொருள் கதர் ஆடை.
இந்த சிறப்பு அரிய அரும்பொருளை பொதுமக்கள் அனைவரும் வருகிற 31.10.2021 வரை அரசு அருங்காட்சியகத்தில் பார்வையிடலாம்
HIGHLIGHTS
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் அக்டோபர் 2021 மாதத்தில் மாதாந்திர சிறப்பு அரும்பொருள் கதர் ஆடை. காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் (கூ.பொ) டி.பக்கிரிசாமி வெளியிட்ட தகவல்:
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் அக்டோபர் 2021 மாதத்தில் பார்வையாளர்கள் பார்வையிடுவதற்கு மாதாந்திர சிறப்பு அரும்பொருள் ஒன்று (கதர் ஆடை) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆடை என்பது பெரும்பாலோருக்கு உடலை மறைப்பதற்கும், குளிர், வெப்பம், காற்று போன்றவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்கும், தங்களை அழகுபடுத்திக்கொள்வதற்கும் பயன்படுகிறது. ஆனால் ஆடையையே தனது அடையாளமாக, அரசியலாக, போராட்டப் பெருளாக மாற்றி புரட்சிசெய்து நாட்டு மக்களை தன்பக்கம் திருப்பியவர் மகாத்மா காந்தியடிகள். "ஏழை எளியோர் இடுப்பில் அரையாடையுடன் இருக்கும்போது தனக்கு மட்டும் பாதத்திலிருந்து தலைப்பாகை வரை ஏன் இத்தனை ஆடம்பரம்" என்று அரையாடைக்கு மாறியது காந்தியின் ஆடை அரசியல்.
ஆடையை ஆயுதமாக்கி அரசியல் களத்தில் போராடி வெற்றியடையமுடியும் என்று உலகுக்குக் காட்டிய மாமனிதர் காந்தியாகத்தான் இருக்க முடியும். எளிமையான கோலத்துடன், ஏழைகளோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் மகாத்மா காந்தியடிகள். அக்டோபர் 2 காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு கதராடை அக்டோபர் மாத சிறப்பு அரும்பொருளாக இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த அரிய அரும்பொருளை அனைவரும் தற்போது 31.10.2021 வரை புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பார்வையிடலாம்.
மேலும் காலை 09.30 மணி முதல் மாலை 5 மணி வரை அருங்காட்சியகத்தைப் பார்வையிடலாம். விடுமுறை நாட்கள் ஒவ்வொரு வெள்ளி, மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளார்.