வருணபகவானின் கருணையால் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கடைவீதியில் குவிந்த மக்கள்
அடைமழை பெய்ததால் வியாபாரம் இல்லாமல் பரிதவித்ததுடன் போட்ட முதலீடு திரும்ப வருமா என்ற அச்சத்திலும் வியாபாரிகள் இருந்தனர்
HIGHLIGHTS
புதுக்கோட்டையில் பிற்பகலில் சில மணி நேரம் மழை பெய்யாததால் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கீழராஜவீதி குவிந்த பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடைகள் மற்றும் பலவகை பொருள்களை விற்பனை செய்வதற்காக வியாபாரிகள் தரைக்கடைகள் அமைத்துள்ளனர். மக்கள் திரண்டு வரக்கூடிய காலை மாலை வேளைகளில் தொடர் மழை பெய்ததால் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் புதன்கிழமை அதிகாலையில் தொடங்கிய மழை சுமார மூன்று மணிநேரம் பெய்தது. தீபாவளி பண்டிகைக்காக தரைக்கடைகள் அமைத்த நாளில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் வரவில்லை. இதனால் வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் பரிதவித்து வந்தனர். போட்ட முதலீடு திரும்ப வருமா என்ற அச்சத்திலும் இருந்து வந்தனர்.
தீபாவளி பண்டிகையின் முதல்நாளான இன்று பிற்பகலில் வானம் மேகமூட்டமாக இருந்தது. மழை மீண்டும் கொட்டித்தீர்க்கப்போகிறது அச்சத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், நல்லவேளையாக வருணபகவானின் கருணையால் மழை பெய்யவில்லை. இதனால் கீழராஜ வீதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து பொருட்கள் மற்றும் புத்தாடைகளை வாங்கினர். மக்கள் அதிகளவில் வந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தனர்.
கீழராஜ வீதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு அறை மூலம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகளை ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர். அதேபோல் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பல்வேறு வீதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.