7 பேர் விடுதலை தொடர்பாக திமுக நாடகமாட அவசியமில்லை : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
விடுதலை தொடர்பாக முழு முயற்சியில் முதல்வர் இறங்கியுள்ளார். அது தொடர்பாக , தற்போது வெளியில் எதையும் கூற முடியாது
HIGHLIGHTS
7 பேர் விடுதலை தொடர்பாக திமுக நாடகம் ஆட வேண்டிய அவசியம் இல்லை என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நடமாடும் ரத்த தான சேகரிப்பு வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி பேசியதாவது: நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக உள்ளது ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் எதிர்காலத்தில் பாதுகாப்பாக நாம் குடியிருக்க முடியும்.
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி இருந்தால் அவர்களுக்கு மாற்று இடம் அளிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதுதொடர்பாக நல்ல விடிவு காலத்தை விடியலை தமிழக முதல்வர் தருவார்.7 பேர் விடுதலையில் திமுக நாடகம் ஆடுகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியது உள்நோக்கம் கொண்டது. இந்த விவகாரத்தில் எந்த நாடகமும் ஆட வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை.
விடுதலை தொடர்பாக முழு முயற்சியில் முதல்வர் இறங்கியுள்ளார், எந்த வகையில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து தற்போது வெளியில் கூற முடியாது. சட்டத்திற்குட்பட்டு அவர்களை வெளியே கொண்டு வருவதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கெனவே 700 கைதிகள் விடுதலை செய்வதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு விட்டது விரைவில் அந்த பட்டியல் வெளியிடப்படும்.
மேலும், இதில் பல கைதிகளையும் சேர்க்கவேண்டும் என்று போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், கூடுதல் தளர்வுகளை அளிக்க தமிழக முதல்வர் முடிவு செய்துள்ளார்.சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசித்து வருகிறார். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என்றார் அமைச்சர் ரகுபதி.