தாட்கோ மூலம் தொழில் முனைவு மேம்பாட்டுத் திட்டத்தில் மானியத்துடன் கடன் பெறலாம்
முதலமைச்சரின்-ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம்
HIGHLIGHTS
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்க ளான பொருளாதார மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்புத் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டம் (மருத்துவம்) நிலம் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களை ஒருங்கிணைத்து முதலமைச் சரின்-ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் என்கின்ற பெயரில் ரூ.40.00 கோடி செலவினத்தில் புதிய திட்டமாக செயல்படுத்துதல்.
விளிம்பு நிலையிலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டில் மிகவும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) 18.04.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2023-2024-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கூட்டத்தொடரில் இத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளையோரின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட உதவிடும் பொருட்டு தற்காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்கப்படும்.
இதன் தொடர்பாகதாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்களான பொருளாதார மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டம் (மருத்துவம்) நிலம் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களை ஒருங்கிணைத்து, ‘முதலமைச்சரின்-ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் (CM-ARISE – Chief Minister’s Adi Dravidar and tRIbal Socio Economic Development Scheme) என்கின்ற பெயரில் ரூ.40. கோடி செலவினத்தில் புதிய திட்டமாக செயல்படுத்தப்படும்.
இப்புதிய திட்டத்தின்படி ஆதிதிராவிடர்களுக்கான தனிநபர் திட்டத் தொகையில் முன்விடுப்பு மானியமாக விடுவிக் கப்படும் தொகை 30 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்தவும் அல்லது அதிகபட்சமாக ரூ.3.50 இலட்சம் இதில் எது குறைவானதோ அதை கடன் வழங்கும் வங்கிக்கு வழங்கவும் மற்றும் பழங்குடியினருக்கு திட்ட மதிப்பீட்டில் 50 விழுக்காடு அல்லது ரூ.3,75,000 இவற்றில் எது குறைவானதோ அத்தொகையை மானியமாகவும் 6 % வட்டி மானியத்தினை அரையாண்டிற்கு ஒருமுறை சம்பந்தப்பட்ட வங்கிகளிடமிருந்து பெற்று, ஒத்தி வைப்பு காலம் உட்பட முழுவதுமாக திரும்ப செலுத்தும் காலம் வரை வட்டி மானியம் பெறுவதற்கான தகுதிகளின் அடிப்படையில் வழங்கவும் 07.12.2023-இல் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படும்.
இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை, புதுக்கோட்டை 04322-221487 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த திட்டத்தினை பயன்படுத்தி கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.