கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் மதிப்பீட்டு முகாம்: டிஇஓ அறிவிப்பு
ஜீலை 29 முதல் 31 வரை கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் கற்போருக்கு மூன்று நாள் மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளதாக டிஇஓ அறிவிப்பு.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில், கற்போம் எழுதுவோம் இயக்கத்தில், கற்போருக்கு மதிப்பீட்டு முகாம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி கூறியது:
தமிழகத்தில் 2020-2021 நிதியாண்டில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத 3.10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் கற்போம் எழுதுவோம் இயக்கம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 394 மையங்களில் பயிலும் எழுத படிக்கத் தெரியாத 7949 கற்போர்களுக்கு தன்னார்வலர்கள் பயிற்சி அளித்து வருகிறார்கள்.
கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ் எழுத்தறிவு மையங்களில் சேர்ந்து பயின்று வருகின்ற கற்போர்கள் அனைவருக்கும் குறைந்த பட்ச கற்றல் அடைவுகளின் அடிப்படையிலான மதிப்பீட்டு முகாமை ஜீலை 29 முதல் 31 வரை மூன்று நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கற்போருக்கான மதிப்பீட்டு முகாம் என்பது அடைவுத் தேர்வு அல்ல. மாறாக கற்போர்களின் குறைந்த பட்ச கற்றல் அடைவை கற்போர்களின் நிலைக்கு ஏற்றவாறு மதிப்பிடும் நிகழ்வாகும்.
இம் மதிப்பீட்டு முகாமை கற்போருக்கு ஏதுவாக மைய அளவிலோ,அவரவர் இல்ல அளவிலோ, நூறு நாள வேலைத்திட்டம் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பணியிடங்கள் அளவிலோ பரவலாக்கப்பட்ட முறையில் நடத்திட திட்டமிட வேண்டும். கற்போர்களை படித்தல்திறன், எழுதும் திறன், எண்ணறிவுத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும்.
கற்போர்களின் குறைந்த பட்ச கற்றல் வெளிப்பாட்டினை மதிப்பிடும் மதிப்பீட்டுப் படிவத்தினை பள்ளித்தலைமையாசிரியர்களிடம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் வழங்க வேண்டும். மேலும் கற்போர்களுக்கான மதிப்பீட்டு முகாமை நடத்திடும் பொழுது தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள புதிய மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை ராஜேந்திரன், அறந்தாங்கி திராவிடச் செல்வம், இலுப்பூர் சண்முகநாதன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதம் செய்திருந்தார்.