சிபிஎம் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக கவிவர்மன் மீண்டும் தேர்வு
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
HIGHLIGHTS
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக எஸ்.கவிவர்மன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட 14-வது மாநாடு திருமயத்தில் ப.சண்முகம், எம்.உடையப்பன், எம்.முத்துராமலிங்கம் நினைவரங்கில், கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது. மாநாட்டை தொடங்கி வைத்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் உரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வேலை அறிக்கையையும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.பொன்னி வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
மாநிலக்குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னத்துரை உள்ளிட்டோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர். மாநாட்டை நிறைவு செய்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். மாநாட்டில், எஸ்.கவிவர்மன் மீண்டும் மாவட்டச் செயலாளராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக எம்.சின்னத்துரை, ஏ.ராமையன், எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், கே.சண்முகம், என்.பொன்னி, ஜி.நாகராஜன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களை உள்ளடக்கிய 41 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர்களும், 16 பேர் கொண்ட மாநில மாநாட்டுப் பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.மாநாட்டில் பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்தும் மத்திய அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும். காவிரி- வைகை- குன்டாறு இணைப்புத் திட்டத்தை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி விரைந்து செயல்படுத்த வேண்டும்.
தேசிய வேலை உறுதித்திட்டத்தை நகர்புறப் பகுதிகளுக்கு முழுமையாக விரிவு படுத்துவதோடு கூலியையும், வேலை நாட்களையும் அதிகப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.