சாகச நிகழ்வில் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்ற வந்த கராத்தே வீரர் உயிரிழப்பு
புதுக்கோட்டையில் கராத்தே வீரர் சாகசம் செய்யும் போது உடலில் தீப்பற்றி எரிந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை வடக்கு நான்காம் வீதி பகுதியில் அமைந்துள்ள சிங்கமுத்து அய்யனார் கோவில் அருகே உள்ள மைதானத்தில் கடந்த 14ஆம் தேதி கராத்தே வீரர்களுக்கான சாகச விழா நடைபெற்றது. இதில் பல்வேறு தரப்பட்ட முக்கிய பிரமுகர்கள், அப்பகுதி பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சாகசத்தை கண்டுகளித்தனர். அப்பொழுது கராத்தே பிரிவு இளைஞர் பாலாஜி என்பவர் கைகளில் துணிகளை கட்டிக்கொண்டு அதில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டி சாகசம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது திடீரென பலத்த காற்று வீசியதன் காரணமாக கைகளில் இருந்த தீயானது உடலில் பரவியதால்,அவர் பலத்த படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் 108 வாகனம் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கராத்தே வீரர் பாலாஜி( 19) இன்று காலை உயிரிழந்தார்.கராத்தே எவ்வாறு பழக வேண்டும் என்பது குறித்த பயிற்சி முறைகளை பாலாஜி யூடியுபில் வீடியோவும் பதிவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சாகசம் செய்யும் பொழுது தீப்பிடித்து இறந்த சம்பவம், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கராத்தே வீரர்களையும் , அவருடன் படித்த மற்ற மாணவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.