விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
குமாரபாளையம் தாலுகா, ஓலப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தபோதும் தங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ. 1,000 இதுவரை வழங்கப்படவில்லை. அதற்கான பதிலும் அளிக்கப்படவில்லை. உடனடியாக விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்க வேண்டும் என்று, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினாõர்கள்.
மகளிர் குழுவினர் மனு:
திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் ஒன்றியம், சப்பையாபுரம் கிராமத்தில் ஒரு மகளிர் சுய உதவிக்குழு செயல்பட்டு வருகிறது. இதில், 11 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு ரூ. 10 லட்சம் வங்கியில் குழு பெயரில் கடன் பெறப்பட்டது. அதற்கான அசல் மற்றும் வட்டியை வங்கியில் செலுத்துமாறு குழுவில் உள்ள 3 நிர்வாகிகளிடம் வழங்கிய நிலையில், அவர்கள் அந்த தொகையை வங்கியில் செலுத்தாமல் ரூ. 6 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குழுவில் மீதமுள்ள 8 பேர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போட்டி நடைபெறவில்லை. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை, வருகிற 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.