பகுதி சபைக் கூட்டங்களில் மக்கள் திரளாக பங்கேற்க, கலெக்டர் அறிவுறுத்தல்
Namakkal District Collector- நகர பகுதி சபை கூட்டங்களில், பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும் என, கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
HIGHLIGHTS
Namakkal District Collector- உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் நகராட்சியில் 3 இடங்களில் நகரப் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. நகராட்சி 10வது வார்டு எம்ஜிஆர் காலனி சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:
நவம்பர் 1ம் தேதியை, உள்ளாட்சிகள் தினமாக அறிவித்து, அந்த நாளில் நகர மற்றும் கிராம பகுதிகளில் சிறப்பு நகர, கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் நகராட்சியில், வார்டு குழுக்கள் மற்றும் பகுதி சபாக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி நாமக்கல் நகராட்சியில், 39 வார்டுகளுக்கு 156 பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நடைபெறும் பகுதி சபை கூட்டங்களில், பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு தங்களது பகுதிகளில் தேவைப்படும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து நகரின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்களது வீடுகளில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்தி மழை நீரை சேகரிக்க வேண்டும். மழை காலத்தில் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் இருக்க தங்களது சுற்றுப்புறத்தில் உள்ள பயன்பாடற்ற டயர், தொட்டி, ஆட்டுக்கல் உள்ளிட்டவற்றில் மழை நீர் தேங்காத வண்ணம் அப்புறப்படுத்த வேண்டும். தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரங்களை கொசுக்கள் முட்டையிடாத வகையில், பாதுகாப்பாக மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும் போதும், அன்றாட தேவைகளுக்கும் துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பெண் கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் வழங்கிட வேண்டும். தங்கள் பெண் குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பிய பிறகே திருமணம் செய்ய வேண்டும் என்று அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். பெண் குழந்தைகளை குறைந்த பட்சம் இளங்கலை பட்ட படிப்பு வரையாவது படிக்க வைக்க வேண்டும். மேலும் இன்றைய தினம் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருட்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கூறினார்.
முன்னதாக ராஜ்யசபா எம்.பி ராஜேஸ்குமார், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனிசிபாலிட்டி சேர்மன் கலாநிதி, வைஸ் சேர்மன் பூபதி, நகராட்சி கமிஷனர் சுதா, தாசில்தார் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய நகராட்சிகளில் பகுதி சபாக் கூட்டங்கள் நடைபெற்றது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2