மருத்துவ படிப்பு தரவரிசையில் நாமக்கல் மாணவர்கள் முதல், இரண்டாமிடம்
மாநில அளவில், மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி டாக்டராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வேன் என்று கூறியுள்ளார்.
HIGHLIGHTS
அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கு, அகில இந்திய அளவிலான நீட் தேர்வு, தேசிய தேர்வு முகமை மூலம், கடந்த செப். 12-ந் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் கடந்த அக். 31-ந் தேதி வெளியிடப்பட்டு, தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட தும்மங்குறிச்சியைச் சேர்ந்த மாணவி கீதாஞ்சலி என்பவரும், ச.பே.புதூரைச் சேர்ந்த மாணவர் பிரவீன் என்பவரும், நாமக்கல் கிரீன்பார்க் கோச்சிங் சென்டரில் படித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் நீட் தேர்வில் 720க்கும் 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 27ம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான, மாநில அளவில் மாணவர்கள் தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வெளியிட்டார். இந்த தரவரிசை பட்டியலில் நாமக்கல் மாணவி கீதாஞ்சலி மாநில அளவில் முதலிடமும், நாமக்கல் மாணவர் பிரவீன் 2-வது இடமும் பிடித்துள்ளனர்.
இதுகுறித்து, மாநில முதலிடம் பெற்ற மாணவி கீதாஞ்சலி, நமக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில், மாநில முதலிடம் கிடைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கலந்தாய்வின்போது நான் புதுச்சேரி ஜிப்மர் கல்லூரியை தேர்வு செய்து படிக்க உள்ளேன். டாக்டராகி எதிர்காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதே எனது குறிக்கோள் என்றார்..
மாநில இரண்டாம் இடம் பெற்ற மாணவர் பிரவீன், நமக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, தரவரிசைப் பட்டியலில் 2-வது இடம் பிடித்தது மிகுந்த உற்சாகத்தை தருகிறது. நான் புதுச்சேரி ஜிப்மர் கல்லூரியில் சேர உள்ளேன். தற்போதைய சூழ்நிலையில் பலரும் மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே எதிர்காலத்தில் இதய நோய் நிபுணராகி ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்று கூறினார்.