நாமக்கல்லில் 512 வாக்குசாவடிகள் பிரிப்பு-ஆட்சியர்
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள 512 வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்தல் தொடர்பாக அனைத்து கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளை பிரித்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் பேசிய நாமக்கல் ஆட்சியர் மெகராஜ், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் தற்போது 1623 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக வாக்காளர்கள் தனி மனித இடைவெளியுடன் வாக்களிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள 512 வாக்கு சாவடிகள் இரண்டாக பிரிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தற்போது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2135 வாக்குச்சாவடிகள் உள்ளன. அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது பகுதிகளில் உள்ள இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திடவும், பட்டியலில் உள்ளவர் இறந்தால் அவரின் பெயரை நீக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.