பெண்ணை கொலை செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை: நாகை கோர்ட்டு தீர்ப்பு
பெண்ணை கொலை செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
HIGHLIGHTS
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்கு பொய்கைநல்லூர் அந்தோணியார் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தவேலன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரண்யா. பூ வியாபாரியான சரண்யா வீட்டின் பின்பகுதியில் வசிப்பவர் கணேஷ்குமார் என்கிற திருட்டுகுமார்.
இவர் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி சரண்யாவிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். அப்போது சரண்யா சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் கணேஷ்குமாரை பிடித்து அடித்தனர். இதில் சரண்யா, கணேஷ்குமாரை செருப்பால் அடித்தார்.இதனால் கணேஷ்குமார், சரண்யா மீது கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி சரண்யா தனது குழந்தையுடன் வெளியூர் செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். அப்போது அங்கு வந்த கணேஷ்குமார், சரண்யாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்தகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு நாகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி கிங்ஸ்லிகிறிஸ்டோபர் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட கணேஷ்குமாருக்கு ஆயுள்தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். இதனையடுத்து கணேஷ்குமார் குமாரை போலீசார் சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர்.