கே.ஆர்.பி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு வரும் தண்ணீர் முற்றிலும் நின்றதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையின் நீர்மட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி மொத்த உயரமான 52 அடியில், 50.35 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு, 38 கன அடியாக இருந்த நிலையில் அணையில் இருந்து, 162 கன அடி நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழையின்றி கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி முதல் 21ம் தேதி வரை 20 நாட்களுக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது. பின்னர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், பிப்ரவரி மாதம் 22ம் தேதி அணைக்கு நீர்வரத்து 162 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 47.35 அடியாக குறைந்திருந்தது.
தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், பிப்ரவரி மாதம் 28ம் தேதி அணைக்கு வரும் நீரின் அளவு, 55 கன அடியாக குறைந்து கடந்த, 1ம் தேதி முதல் 20 நாட்களாக தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது. மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வருவதாலும், அணைக்கு நீர்வரத்து இல்லாததாலும் அணையின் நீர்மட்டம் நேற்று, 43.65 அடியாக குறைந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக வாய்க்கால் மூலம், 149 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் தண்ணீர் குறைந்து வருவதால், மீன் குத்தகை ஏலம் எடுத்தவர்கள் தற்போது மீன் பிடித்து வருகின்றனர். அதே வேளையில் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.