தமிழகத்திலேயே முதல் முறையாக இணையவழி மக்கள் குறைதீர் நாள் கூட்டம் : கரூரில் கலெக்டரின் புதிய முயற்சி
தமிழகத்திலேயே முதல் முறையாக இணையவழி மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தை நடத்தி கரூர் கலெக்டர் புதிய முயற்சி செய்து அசத்தி உள்ளார்.
HIGHLIGHTS
தமிழகத்திலேயே முதல்முறையாக கரூர் மாவட்டத்தில் இணையவழி மூலம் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் காணொளி மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு குறைகளை தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். பொதுமக்கள் பல்வேறு துறைகள் தொடர்பான மனுக்களை நேரடியாக ஆட்சியரிடம் வழங்குவர்.
உடனடியாக அது குறித்து நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்கப்படும். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு எதிரொலியாக ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தமிழகத்திலேயே முதன் முதலாக புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதாவது காணொளி காட்சி மூலம் மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தை நடத்த முயற்சி எடுத்து, இன்று முதன்முதலாக மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இணையதளம் வாயிலாக நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் காணொளி காட்சி மூலம் இணைந்திருந்தனர். இந்த காணொளி காட்சி மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் இணையதள வாயிலாக கலந்துகொண்டு பல்வேறு குறைகளை தெரிவித்தனர்.
அந்தக் குறைகள் அனைத்தும் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளால் குறிப்பு எடுக்கப்பட்டு குறைகளை உடனடியாக களைய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.