சைபர் க்ரைம் வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
தமிழகத்தில் சைபர் க்ரைம் குற்றத்துக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் 2 வது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
HIGHLIGHTS
கடந்த மாதம், கரூரில் பணியாற்றும் வங்கி அதிகாரியை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் அவருடைய மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளனர். இதையடுத்து பயந்துபோன வங்கி அதிகாரி மிரட்டிய நபர்களுக்கு கூகுல் பே மூலம் 49 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். தொடர்ந்து அந்த நபர்கள் வங்கி அதிகாரியை மிரட்டியது அடுத்து, அவர் கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்கை பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், பொள்ளாச்சியை சேர்ந்த இரண்டு நபர்கள் கரூரைச் சேர்ந்த வங்கி அதிகாரியை மிரட்டி அவரது மனைவி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியது அம்பலமானது.
இதையடுத்து, வங்கி அதிகாரியை மிரட்டிய பொள்ளாச்சியை சேர்ந்த பிரசாத் மற்றும் அஜித்குமார் ஆகிய இரண்டு நபர்களை கரூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட பிரசாத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
இதன் அடிப்படையில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், பிரசாத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். தமிழகத்திலேயே சைபர் கிரைம் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும். இரண்டாவது நபர் பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது.