குமரியில் அதிமுக வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு: தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்
குமரியில் அதிமுக வேட்பாளர்கள் மீது 110 ன் படி வழக்கு பதிவு செய்யும் காவல்துறைக்கு தளவாய் சுந்தரம் கண்டனம் தெரிவித்தார்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை குறி வைத்து அவர்கள் மீது காவல்துறையினர் 110 வழக்கு பதிவு செய்து மிரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் பேரூராட்சிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது குமரி மாவட்ட காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறும் போது குற்றத்தை தடுக்க வேண்டிய காவல் துறை குற்றவாளிகளை உருவாக்குகிறது.
மேலிடத்தில் இருந்து அழுத்தம் வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவிப்பது கண்டனத்துக்கு உரியது. குமரியில் அதிமுக வேட்பாளர்கள் மீது 110 ன் கீழ் வழக்கு பதிவு செய்வதை காவல்துறை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் அதிமுக வேட்பாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எச்சரித்தார். மேலும் தினந்தோறும் ஒவ்வொரு விதமாக அறிவிக்கை விடுவது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடாக உள்ளது எனவும் விமர்சித்தார்.
அப்போது முன்னாள் அமைச்சரும், அதிமுக கழக மாநில அமைப்பு செயலாளருமான பச்சைமால், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.