ஒரே நாளில் 80 கனரக வாகனம் மற்றும் 1860 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு
குமரியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 80 கனரக வாகனம் மற்றும் 1860 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரத்துடன் கனரக வாகனங்கள் அதிவேகமாக வருவதால் விபத்துகள் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.
மேலும் மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்வதால் விபத்துகள் அதிகரிப்பதாகவும் தெரியவந்தது.
மேலும் அதி வேகத்துடன் செல்லும் கனரக வாகனங்கள் பெரும்பாலும் கனிமவளம் கடத்தலில் ஈடுபடும் வாகனமாக இருப்பதாகவும் ஆய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அதிக பாரம் மற்றும் அதி வேகத்துடன் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலைய எல்கை பகுதிகளிலும் போலீசாரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
அதன்படி நடைபெற்ற வாகன சோதனையில் ஒரே நாளில் அதிக பாரம் மற்றும் அதிவேகத்துடன் வந்த 80 கனரக வாகனங்கள் மற்றும் தலைக்கவசம் இல்லாமலும் உரிய ஆவணங்களும் இல்லாமலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வந்த 1860 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த 12 நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மீதும் குமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.