காஞ்சிபுரத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
நிதி நிறுவனம் நடத்தி ஏமாற்றியவர்களை கைது செய்யக்கோரி காஞ்சிபுரத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ,அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பொதுமக்களிடம் வசூலித்து, தற்போது நிதி நிறுவன அதிபர்கள் தலைமறைவாகி உள்ளனர்.
இதனை கண்டித்து காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பெரியார் தூண் அருகே தமிழக மக்கள் முன்னேற்றக் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் காஞ்சி கண்ணன் தலைமையில் , பொதுமக்களை ஏமாற்றி , கவர்ச்சிகரமான வாக்குறுதி அளித்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்கள் மீது தமிழக காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து மீண்டும் பொது மக்களுக்கு பணத்தை வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல நுட்பமான குற்ற செயல்களை கண்டுபிடித்து காவல்துறை தனது திறமையை வெளிப்படுத்திய நிலையில் இது போன்ற பொருளாதார குற்றப்பிரிவு சம்பவங்களில் போதிய ஆதாரங்களை பெற்று உடனடியாக நிதி நிறுவன அதிபர்களை கைது செய்து அவர்களின் பினாமி சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என இதில் பேசிய அனைத்து மாவட்ட செயலாளர்களும் வலியுறுத்தினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மதன்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் முகவரி செல்வா மற்றும் தேவேந்திர வேளாளர் குல நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.