காஞ்சிபுரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவு திறப்பு
காஞ்சிபுரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் 15 படுக்கைகளுடன் அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே செயல்பட்டு வருகிறது அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனை. இங்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள் மற்றும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகம் இல்லாமல் பிற மாநிலங்கள் பிற நாடுகளை சேர்ந்த நோயாளிகள் கூட இங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனையை மேம்படுத்த தமிழக அரசு ஏற்கனவே 100 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கி புதிய மூன்று அடுக்கு அதிநவீன படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கூடுதலாக தற்போது 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி புதிய அதி நவீன அறுவை சிகிச்சைக் கருவிகள் மற்றும் நோயாளிகளுக்கான அனைத்து வசதிகளும் செய்து தரும் வகையில் நிதி ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் இன்று ரூ.3 கோடி மதிப்பீட்டில் 15 அதி நவீன சிகிச்சை படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இப் புதிய முறையின் மூலம் தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் உடல் இயக்க செயல்பாடுகள் ஒரே இடத்தில் 24 மணி நேரமும் செவிலியர் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள கண்காணிப்பு திரையில் அவர்களின் உடல்நிலை காட்சிப்படுத்தப்பட்டு நோயாளிகளின் உடல் இயக்க தன்மைக்கு ஏற்ப உரிய சிகிச்சையை சரியான நேரத்தில் சிறப்பு மருத்துவ குழுவினரால் வழங்கப்பட்டு விலை மதிப்பற்ற உயிர்கள் காப்பாற்ற இந்த அதிநவீன சிகிச்சை மையம் செயல்படும்.
அதிநவீன சிகிச்சை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகள் முழுவதும் வசதி கொண்ட கண்காணிப்பு உபகரணங்கள் பொறுத்த அமைக்கப்பட்டுள்ளது. ஒரு படுக்கை அமைக்க சுமார் 16 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.