தாயார்குளம் புதிய நியாய விலைக்கடை பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
தாயார்குளம் பகுதியில் புதியதாக 13.5 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டிடம், மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு குளம் பகுதியாகும். இது உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி என்பதால், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 13.5 லட்சத்தில் அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நியாய விலைக்கடை கட்டிடம் கட்டப்பட்டது.
இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று அத்தியாவசிய பொருட்கள் பெற காத்திருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கோரிக்கைய ஏற்று நிதி ஒதுக்கப்பட்டு, இது கட்டப்பட்டது.
இந்நிலையில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு தொடர்ச்சியாக சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் என வந்ததால் தேர்தல் விதிகளின்படி, இக்கட்டிடங்கள் திறக்கப்படாமல் உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் குடிமைப்பொருள் அலுவலர்கள் இணைந்து புதிய கட்டிடத்தை, நியாயவிலைக்கடை இயங்க விரைவாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.