கிருஷ்ணர், அம்மன் கோயில்களில் இன்று மகா கும்பாபிஷேகம்
வாலாஜாபாத் அடுத்த சின்னமதுராபக்கத்தில் கிருஷ்ணன் ஆலயமும், எடமிச்சி கிராமத்தில் ஆலடி அம்மன் ஆலயத்திலும் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
HIGHLIGHTS
உத்திரமேரூர் அடுத்த எடமச்சி கிராமத்தில் ஆலடி அம்மன் கோவில் மற்றும் சின்ன மதுராபாக்கத்தில் கிருஷ்ணன் கோயில் என இரு பகுதிகளில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் ஒன்றியம் எடமச்சி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஆலடி அம்மன் ஆலயம் சிறிய ஆலயமாக இருந்து வந்தது. அதனை கிராம மக்கள் ஒன்றிணைந்து பெரிய ஆலயமாக கட்டி கும்பாபிஷேக விழா நடந்த தீர்மானித்தார்.
அதன்படி ஆலய பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், ஆலடி அம்மன் ஆலயம் அருகே உள்ள மாரியம்மன் மற்றும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட நவகிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைப்பெற்றது.
கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த இரண்டு நாட்களாக கணபதி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, நவகிரக பூஜை, பூர்ணாஹிதி, யாக சாலை பூஜைகள், தீப ஆராதனைகள் உள்ளிட்டவை நடைபெற்று வந்தது.
அதைத்தொடர்ந்து இன்று காலை 7:00 மணி முதல் யாக சாலையில் சிவாச்சாரியார்கள் மந்திரம் சொல்ல அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து 9:00 மணியளவில் யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் தலைமையில் மேள தாள வாத்தியங்கள் முழங்க புறப்பட்ட கலசம் ஆலயத்தை சுற்றி வந்து விமான கோபுரத்திற்கு எடுத்து சென்று 10:00 மணியளவில் விமான கோபுரத்தில் கலச புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்து பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதேபோல் , காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன மதுராபாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணர் கோவில் புதிதாக கல்லால் ஆன பசு உடன் கூடிய கிருஷ்ணர் சிலை நிறுவப்பட்டு புதியதாக கட்டப்பட்டது.
கும்பாபிஷேக விழாவை யொட்டி கோவில் வளகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு பூஜை, கோ பூஜை, லஷ்மி ஹோமம, விசேஷ திரவ்ய ஹோமம் பூர்ணாஹதி நடைபெற்று இன்று காலை கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் செய்து மஹா பூர்ணாஹதி தீபாரதனைகள் நடைபெற்றது.
அதன் பின் ராஜ கோபுரம், விமானங்களுக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதன் பின் அருள்மிகு ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணர் சுவாமிக்கு சிறப்பு தீப தூப தீபாராதனைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக பெரு விழாக்காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகம் நடைபெற்று கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீரை பக்தர்கள் தெளித்து கொண்டனர். மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் அருட் பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது.