செஸ் ஒலிம்பியாட் நினைவு நாவல் வனத்தை பராமரிக்கும் கிராம ஊராட்சி
கீழம்பி கிராம ஊராட்சியால் ஒலிம்பியாட் செஸ் நாவல் வனம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவது நெடுஞ்சாலையில் செல்வோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது
HIGHLIGHTS
பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு சார்பில் கடந்த வருடம் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டு, தமிழக அரசால் குறைந்த கால அளவில் மாமல்லபுரத்தில் உலகமே வியக்கும் வகையில் அனைத்து சிறப்பு ஏற்பாடுகளுடன் 44 வது செஸ் ஒலிம்பிக் போட்டி ஜூலை 28ஆம் தேதி துவங்கியது.
இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 188 அணிகள் சார்பாக 1737 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த சர்வதேச விளையாட்டு போட்டியில் 937 ஓபன் போட்டிகளும் 800 மகளிர் கலந்து கொண்ட போட்டிகள் நடைபெற்றது.
இது தொடர்பாக தமிழகம் முழுவதும் செஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி துவங்கி பல்வேறு தரப்பிலும் பல்வேறு நிலைகளில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள கீழம்பி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 44 வது சர்வதேச செஸ் விளையாட்டு போட்டி நினைவாக பங்கு கொண்ட வீரர்களின் நினைவை போற்றும் வகையில் 188 நாவல் மரங்கள் நடப்பட்டது.
இந்த நாவல் வனம் அருகே பிரம்மாண்ட குளம் இருப்பதும் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை , மாண்டாஸ் உள்ளிட்டவைகளில் நீர் நிரம்பியதால் இதனைப் பராமரிப்பதில் கிராம ஊராட்சிக்கு பெரிதும் ஆர்வம் ஏற்பட்டு தற்போது சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவது அவ்வழியாக செல்வோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜசேகர் கூறுகையில் ,காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் தங்கள் கிராம ஊராட்சி தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியளித்தது மேலும் இப்பகுதியில் நீர்நிலை அருகில் அமைந்துள்ளதால் மரங்களை பராமரிப்பதில் சிரமமும் இல்லை.
மேலும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் இதனை பராமரிக்க மிகுந்த ஆர்வம் கொண்டு நீர் ஊற்றுதல் , அதன் அருகில் நீர் சேமிப்புக்காக சிறியளவிலான தொட்டி அமைத்து மழை நீர் காலங்களில் சேமிப்பதற்கு உண்டாக்கியதும், தொடர்ந்து நாவல் வனம் உருவாக பெரிதும் மன மகிழ்ச்சியுடன் இப்பணியை மேற்கொண்டு வருவது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது.
இந்த வனத்தினை சுற்றிலும் காம்பவுண்ட் வேலி பல லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டும், அருகிலுள்ள குளத்தில் நீர் சேமிக்கும் வகையிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்
மிகப் பிரம்மாண்டமான முறையில் செஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றதும், அதன் நினைவாக காஞ்சிபுரம் அருகே நாவல் வனம் உருவாவதும் என்றென்றும் விளையாட்டுப் போட்டியினை நினைவு கொள்ளும் வகையில் ஊராட்சியாயால் பராமரிக்கப்படும் இந்த செயலை வரவேற்போம்.