காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை எலும்பியல் துறையின் துரித பணி: பொதுமக்கள் பாராட்டு
காஞ்சிபுரத்தில் விபத்தில் சிக்கிய வாலிபரின் இடுப்பு எலும்பு விலகலை அவசர சிகிச்சை மூலம் சரி செய்த எலும்பியல் துறைக்கு பாராட்டு குவிகிறது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. இங்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முப்பதுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறது.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் அருகே ஆட்டோ மற்றும் லாரி மோதிக்கொண்ட விபத்தில் 26 வயது உடைய வாலிபரின் இடுப்பு மூட்டிலிருந்து விலகி 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
உடனடியாக அவசர விபத்து சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு முதலுதவிகள் அளிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இடுப்பு எலும்பு விலகி உள்ளது அறிந்து உடனடியாக எலும்பியல் துறை நிபுணர்கள் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்து விலகிய மூட்டுப் பகுதியை மீண்டும் பழைய நிலைக்கு சரி செய்தனர்.
தற்போது உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இதே எலும்பியல் துறை சார்பில் 10 சென்டி மீட்டர் அளவுள்ள இரும்பு துண்டு 60 வயது உடைய நபரின் தொடைப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எலும்பியல் துறை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.