முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் 5 பேர் தகுதி நீக்கம்
2017-18 ஆண்டின் இறுதி தணிக்கை அறிக்கை மீதான தனியறிக்கை தொடர்ந்து கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் நடவடிக்கை
HIGHLIGHTS
காஞ்சிபுரம் காந்தி சாலையில் இயங்கி வருகிறது காஞ்சிபுரம் ஸ்ரீ முருகன் பட்டு கூட்டுறவு சங்கம். இரண்டாயிரத்துக்கு மேல் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வரும் இச்சங்கத்தில் வீ.வள்ளி நாயகம் தலைவராகவும் , திருமதி ஜெயந்தி சோமசுந்தரம் துணை தலைவராகவும், நிர்வாக குழு உறுப்பினராக அதிமுக , திமுகவினர் என பலர் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2017-18 ஆம் ஆண்டு சங்க தணிக்கை நடைபெற்றது. இதில் பல குளறுபடிகள் உள்ளதை கண்ட தணிக்கை அதிகாரிகள் இது குறித்த தனி அறிக்கையை கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனருக்கு அளித்தனர்.
அதனடிப்படையில் 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 81 விசாரணை அறிக்கையின் கூடுதல் அறிக்கையின் அடிப்படையில், காஞ்சிபுரம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குனர் அவர்கள் செயல்முறை ஆணைபடி 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டப்பிரிவு 36(1) கீழ் சங்க தலைவரான வீ.வள்ளிநாயகம் மற்றும் திருமதி ஜெயந்திசோமசுந்தரம் துணைத் தலைவர் , நிர்வாக குழு உறுப்பினர்களான எஸ்.கீதா , கிருஷ்ணமூர்த்தி மற்றும் இளங்கோவன் ஆகியோரை நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்.
இச்சம்பவம் காஞ்சிபுரம் நெசவாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.