ஜல்ஜீவன் திட்டத்திற்கு உறுதுணை புரிந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்
ஜல் ஜீவன் திட்டத்தில் குடியிருப்புகளுக்கு 100% இணைப்புகள் வழங்கியதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு பாரத பிரதமர் விருது வழங்கி பாராட்டு தெரிவித்திருந்தார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊரக வளர்ச்சித்துறை அனைத்து நிலை அலுவலர்களை சிறப்பிக்கும் நிகழ்வாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
மத்திய அரசு திட்டமான ஜல்ஜீவன் திட்டம் என்பது பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் அனைவருக்கும் 100 சதவீதம் குடிநீர் வழங்கல் என்ற நோக்குடன் செயல்பட்டு வருகிறது.
இதற்கு அதிக அளவு முக்கியத்துவம் அளித்து மத்திய அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கி மாநிலங்களின் உள்ள ஊரக வளர்ச்சித் துறை மூலம் இதனை முழுமையாக செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக கிராமப்புற பகுதிகள் மற்றும் நலிந்த பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் பொது மக்களுக்கு குடிநீர் வழங்க கிராம ஊராட்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்பார்வையில் திட்டம் கண்காணிக்கப்பட்டு வந்தது.
மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் இத்திட்டத்தினை மத்திய அரசு அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வந்தனர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டமான ஜல் ஜீவன் திட்டத்தில் 2020-2021 ஆம் ஆண்டு ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தி குறித்த காலத்தில் 100% திட்ட இலக்கினை அடைந்ததற்காக நல்ஆளுமைக்கான விருதினை பாரத பிரதமர் அவர்களால் கடந்த 21.04.2023 தேசிய குடிமை பணி தினத்தன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்திக்கு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊரக வளர்ச்சித்துறை அனைத்து நிலை அலுவலர்களை சிறப்பிக்கும் நிகழ்வாக மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியரால் 150க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவில் அரசு திட்டங்களை திறன் பட செயலாற்ற வேண்டும் எனவும், இதில் சந்தேகங்கள் இருந்தால் முறையான அலுவலர்களை வழிகாட்டுதலின் படி செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வகுமார் மற்றும் மாவட்ட அளவிலான பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.