அனைத்து பாடங்களுக்கும் ஏற்றார்போல் ஓரே நுழைவுத்தேர்வு: மத்திய அமைச்சர்
அனைத்து பாட துறைகளுக்கும் ஒரே நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தகவல்
HIGHLIGHTS
அனைத்து பாட துறைகளுக்கும் ஒரே நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளி மாணவர்களுடன் உரையாடிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
மத்தியரசின் கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் இருநாள் அரசு பயணமாக நேற்று இரவு காஞ்சிபுரம் வருகை புரிந்தார். அவருக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார் ,எலெக்டிரிக் ஜீவானந்தம் உள்ளிட்ட நகர பிரமுகர்களால் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து இன்று காலை உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில் காமாட்சி அம்மனை சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு இந்து சமய அறநிலை துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு அம்மன் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
அதனை அடுத்து மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் வெள்ளை கேட் பகுதியில் அமைந்துள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளி மாணவ, மாணவிகளை சந்தித்து அவர்களுடன் உரையாடல் நடத்தினர்.
மாணவ மாணவிகள் புதிய கல்வி பாடத்திட்டங்கள் குறித்து கேட்டு அதற்கான விளக்கங்களை பெற்றனர்.
இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பொறியாளர் சந்திப்பில் பேசிய மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், கல்வியாளர்களுக்கு கல்வி நிறுவனங்களின் நுழைவு வாயிலில் பெரிய கண்ணாடியை பொருத்த வேண்டும் என்றும் அதை மாணவர்கள் பார்க்கும் போதெல்லாம் அவர்களின் பல்வேறு அம்சங்களை பற்றி அறிந்து கொள்வார்கள் என்றும் இது சுய நினைவை மேம்படுத்த உதவும் என்றும் தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு எதிரான எதிர்ப்பு நிலை குறித்து அமைச்சரிடம் கேட்டதற்கு, இது தேசத்தின் பொதுவான நுழைவுத் தேர்வு, இது பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும். நுழைவுத் தேர்வுக்கு முன்னதாக மாணவர்கள் பல்வேறு படிப்புகளுக்கு பல்வேறு கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்க வேண்டும், இதன் விளைவாக விண்ணப்பச் செயல்முறைக்கு மட்டுமே பெரும் பணம் செலவழிக்கப்படும். மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் எந்த மருத்துவப் படிப்புகள் இருந்தாலும் பெறலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும் மாணவர்கள் பல நுழைவுத் தேர்வுகளை எழுதாமல் இருக்கவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கவலையில் இருந்து காப்பாற்றவும் அனைத்து பாடங்களுக்கும் ஒரே பொது நுழைவுத்தேர்வை அரசு யோசித்து வருகிறது. நாட்டின் சிறந்த கல்வி குறித்து, புகழ்பெற்ற விஞ்ஞானி தலைமையிலான குழு மூலம் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ மத்திய அரசு அறிவித்தது. புதிய கல்விக் கொள்கை மாணவர்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்த உதவும் என்று கூறினார்
இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார், பள்ளி முதல்வர், தாளாளர், மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.