பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்கள் துார்வாரும் பணி துவக்கம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதான கால்வாய்களை தூர்வாரும் பணியினை காஞ்சிபுரம் பெருநகராட்சி துவக்கியுள்ளது
HIGHLIGHTS
காஞ்சிபுரம் பெருநகராட்சியில் மழைக்காலத்தில் நகரில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக மூன்று பிரதான மழை நீர் கால்வாய்கள் உள்ளன.
திருப்பருத்திகுன்றம் பகுதியில் இருந்து செல்லும் தும்பவனம் கால்வாய், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள வேகவதி ஆற்றில் கலக்கிறது. ஜெம் நகரில் இருந்து இரட்டை கால்வாய், ஓரிக்கை வழியாக தேனம்பாக்கம் ஏரியில் கலக்கும் வகையில் அமைந்துள்ளது. நகரின் முக்கிய கால்வாயாக உள்ள மஞ்சள் நீர் கால்வாய், பிள்ளையார்பாளையம் பகுதியில் இருந்து பல்லவர்மேடு, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது.
இந்த கால்வாய்கள் சில இடங்களில் துார்ந்து, கோரை புல் ஆளுயரம் வளர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலையில் இருந்தது வந்தது. இந்நிலையில், பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மூன்று கால்வாய்களை துார் வாரும் பணி துவங்கியுள்ளது. பெருநகராட்சி ஆணையர் லட்சுமி கூறுகையில், ''வடகிழக்கு பருவ மழைக்கு முன், மழை நீர் கால்வாய்களை துார் வார வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள், நகரில் உள்ள மூன்று கால்வாய்களும் துார் வாரும் பணி முடிக்கப்படும் என்றார்.